34-வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் அணுசக்தி நிறுவனங்கள் பரிமாற்றம்
34-வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் அணுசக்தி நிறுவனங்கள் பரிமாற்றம்
ADDED : ஜன 01, 2025 06:56 PM

புதுடில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி இருநாடுகளும் 34வது முறையாக அணு சக்தி தொடர்பான நிறுவனங்களை பரிமாறிக்கொண்டன.
இந்தியா, பாகிஸ்தான் இடையே, கடந்த, 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தத்தின் படி, கடந்த, 1991 -ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி , இரு நாடுகளும், தங்களின் அணு மின் நிலையங்கள், அணு சக்தியால் இயங்கும் பிற அமைப்புகள் குறித்த பட்டியலை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், ஜன., 1ம் தேதி, இந்தப் பட்டியல், இருநாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.
அந்த வகையில், இந்தாண்டும் (2025) 34-வது முறையாக இந்த பட்டியல் பரிமாறப்பட்டது. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அல்லது போர் நடைபெறும் போது, அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளானால், இருநாடுகளுக்கு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

