பாதுகாப்பு அச்சுறுத்தல்: மியான்மரில் இந்திய தூதரக ஊழியர்கள் இடமாற்றம்
பாதுகாப்பு அச்சுறுத்தல்: மியான்மரில் இந்திய தூதரக ஊழியர்கள் இடமாற்றம்
UPDATED : ஏப் 13, 2024 12:13 PM
ADDED : ஏப் 13, 2024 11:51 AM

புதுடில்லி: மியான்மரில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக, சிட்டவே நகரில் உள்ள இந்திய துணை தூதரக ஊழியர்கள், யாங்கூன் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பல நகரங்களை ஆயுதக்குழுவினர் கைப்பற்றி உள்ளனர். ராணுவ நிலைகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: மியான்மரில் சூழ்நிலை, மோசமானதாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது. அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சிட்டவே நகரில் செயல்படும் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், யாங்கூன் நகரில் செயல்படும் தூதரக அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

