கனடா அரசு மீது நம்பிக்கையில்லை: தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு
கனடா அரசு மீது நம்பிக்கையில்லை: தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு
UPDATED : அக் 14, 2024 10:29 PM
ADDED : அக் 14, 2024 08:07 PM

புதுடில்லி : இந்திய தூதர் மற்றும் அதிகாரிகளுக்கு கனடா அரசு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை எனக்கூறியுளள மத்திய அரசு, அந்நாட்டிற்கான தூதரை திரும்ப பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், கனடாவிற்கான இந்திய தூதராக இருக்கும் சஞ்சய் குமார் மற்றும் சில குறிப்பிட்ட இந்திய அதிகாரிகள் மீது அந்நாடு மோசமான புகாரை தெரிவித்து இருந்தது. கொலை வழக்கு விவகாரத்தை ஆர்வமுடன் தலையிட்டு விசாரித்து வருவதாக குற்றம்சாட்டியது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் புகார் அளித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்து விட்டது. தூதரக பணியில் சஞ்சய் குமார் நீண்ட கால அனுபவம் பெற்றவர் எனவும், அவர் பல நாடுகளில் தூதராக இருந்துள்ளார் எனவும் கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கனடா தூதருக்கு சம்மன் அனுப்பினோம். இந்திய தூதர் மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் கனடா அரசு கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நிலவும் சூழ்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய தூதர் மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் பாதுகாப்பை தற்போதைய கனடா அரசு உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவு அளிக்கும் ட்ரூடோ அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.