UPDATED : டிச 08, 2024 10:26 PM
ADDED : டிச 08, 2024 10:22 PM

புதுடில்லி: சிரியாவில் வசிக்கும் இந்தியர்கள் நலமாக உள்ளதும், டமாஸ்கஸ் நகரில் இந்தியத் தூதரகம் செயல்படுவதும் தெரியவந்துள்ளது.
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சிப் படைகள், கடந்த ஒரு வாரமாக, சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தை அகற்றும் நோக்கில், தாக்குதலை நடத்தி வருகின்றன. சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.
இதனையடுத்து, சிரியாவில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள். +963993385973 என்ற அவசர கால உதவி எண் மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று, பஷர் அல் ஆசாத் சிரியாவை விட்டு தப்பியோடினார். கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது; சிரியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.