எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; இண்டிகோ விமானம் ஆமதாபாத்தில் தரையிறக்கம்
எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; இண்டிகோ விமானம் ஆமதாபாத்தில் தரையிறக்கம்
ADDED : நவ 24, 2025 07:02 PM

ஆமதாபாத்; எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதால், கண்ணூர்-அபுதாபி பயணிகள் விமானம் ஆமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.
கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் 6E 1433, அபுதாபிக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கிக் கொண்டு இருந்த ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
இதன் சாம்பல்கள் வான்வெளியில் கலந்து, அதன் தாக்கம் வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவை நோக்கி இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கண்ணூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானம் உடனடியாக ஆமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
எரிமலை வெடிப்பு வான்வெளியில் விமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. அதன் காரணமாக, இன்று (நவ.24) மாலை முதல் டில்லி மற்றும் ஜெய்ப்பூர் வான்வெளியில் ஏதேனும் தாக்கம் ஏற்படலாம் என்பதால் விமான போக்குவரத்து அதிகாரிகளும், விமான நிறுவனங்களும் கண்காணித்து வருகின்றன.
ஆகாசா ஏர் நிறுவனம் தமது பயணிகளுக்கு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது;
எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்துச் சிதறி உள்ளதால், அதன் தாக்கம் வான்வெளியில் இருக்கும் என்று நம்புகிறோம். இதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
சர்வதேச விமான ஆலோசனைகள், பாதுகாப்பு நெறிமுறைகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகாசா ஏர் விமான நிறுவனத்தில், பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்.
இவ்வாறு அந்த பதிவில் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

