பறவை மோதியதால் வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
பறவை மோதியதால் வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
UPDATED : ஜன 12, 2026 06:41 PM
ADDED : ஜன 12, 2026 06:34 PM

வாரணாசி: கோரக்பூரில் இருந்து நேற்றிரவு 216 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது. விமானத்தை உடனடியாக வாரணாசியில் தரை இறக்கி, அசம்பாவிதத்தை பைலட் தவிர்த்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உ.பி.,யின் கோரக்பூரில் இருந்து கர்நாடகா தலைநகர் பெங்களூருவை நோக்கி 216 பயணிகளுடன் இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று நள்ளிரவு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது பறவை மோதியதால், முன்பக்கம் சேதம் அடைந்தது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி, உடனடியாக தரை இறங்க முடிவு செய்தார். அருகே இருந்த வாரணாசி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் அனுமதியுடன் உடனடியாக விமானம் அங்கு தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சில பயணிகள் வேறு விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தனர். மற்றவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. விமானியின் துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

