வெடிகுண்டு மிரட்டல்; ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
வெடிகுண்டு மிரட்டல்; ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
ADDED : ஜன 30, 2026 02:31 PM

ஆமதாபாத்: நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், குவைத்தில் இருந்து டில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், அவசர அவசரமாக ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இன்று காலை 6.40 மணியளவில் 180 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று குவைத்தில் இருந்து டில்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சூழலில், விமானத்தின் உள்ளே கிடந்த டிஷ்யூ பேப்பரில் விமானத்தைக் கடத்தப்போவதாகவும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது. இதனைக் கவனித்து பதறிப்போன விமானிகள், உடனடியாக விமானத்தை ஆமதாபாத்தில் தரையிறக்கினர்.
பின்னர், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அவர்களது உடமைகளும் முழுமையாகச் சோதனையிடப்பட்டன. சந்தேகத்திற்கிடமாக எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை. இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று, கடந்த ஜனவரி 22ம் தேதி டில்லியிலிருந்து புனே வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

