மன்மோகன் சிங்குக்கு அவமதிப்பா? ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மன்மோகன் சிங்குக்கு அவமதிப்பா? ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
ADDED : டிச 29, 2024 11:43 PM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு விவகாரத்தில் மத்திய அரசு, அவரை அவமதித்ததாக காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டிய நிலையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல்நலக்குறைவால் டில்லியில் 26ம் தேதி காலமானார். அவருக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்திய காங்கிரஸ், முன்னாள் பிரதமர் இந்திரா நினைவிடமான சக்தி ஸ்தல் பகுதியில் இடம் ஒதுக்க பரிந்துரைத்தது.
அந்த இடத்திலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், நினைவிடம் அமைப்பது தொடர்பாக அறக்கட்டளை அமைத்து முடிவு எடுக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த சூழலில், மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு விவகாரத்தில், அவரை மத்திய அரசு அவமதித்தாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல் குற்றம்சாட்டியிருந்தார்.
அதில், 'மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கை நிகம்போத் காட் பகுதியில் நடத்தியதன் வாயிலாக, மத்திய அரசு அவரை அவமதித்துவிட்டது.
'பாரம்பரியமாக அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும், அவர்களின் இறுதிச்சடங்கில் அதற்கென தயார் செய்யப்பட்ட தனி நினைவிடத்தில் வைத்து, இறுதி மரியாதைகள் செய்யப்படும்.
கூட்ட நெரிசல்
'இதன் வாயிலாக அவர்களின் மகத்தான பங்களிப்புகளை கவுரவிப்பதுடன், பொதுமக்களுக்கு எந்தச் சிரமமுமின்றி இறுதி மரியாதையைச் செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
'மிகச்சிறந்த தலைவரும், சீக்கிய சமூகத்தின் அடையாளமாக இருந்தவருமான மன்மோகன் சிங், இதுபோன்ற உயர்ந்த மரியாதையும், தனி நினைவிடத்தையும் பெற தகுதியானவர்.
'மன்மோகன் சிங்குக்கும், அவரின் சமூகத்திற்கும் இந்த அரசு உரிய மரியாதை அளித்திருக்க வேண்டும்' என, அவர் தெரிவித்திருந்தார்.
'இறுதிச்சடங்கு நிகழ்ச்சியும் உரிய முறையில் ஏற்பாடு செய்யப்படவில்லை. மன்மோகன் சிங் குடும்பத்தினர் அமரக்கூட போதிய இடம் ஒதுக்கப்படவில்லை.
'இடப்பற்றாக்குறையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விஷயத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை' என்ற குற்றச்சாட்டும் காங்., தரப்பில் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மலிவான அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சரவை முடிவு
தனியார் 'டிவி' சேனலுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு விவகாரத்தில், உண்மைகளுடன் கற்பனை கதையை கலக்க ராகுல் முயற்சிக்கிறார்.
மன்மோகன் சிங் இறந்தவுடன், அவருக்கு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.
நான்கு முன்னாள் ஜனாதிபதிகள், மூன்று முன்னாள் பிரதமர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட ஏக்தா ஸ்தல் பகுதியில் இடம் ஒதுக்க கோரப்பட்டது.
டில்லியில் கடும் மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் புதிய இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமான காரியம். அதற்கான நேரமும் அப்போது இல்லை.
மன்மோகன் சிங்கை அவமதித்ததாக கூறும் காங்., கடந்த 2004ல் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இறந்தபோது, அவரின் உடலை கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்க கூட அனுமதிக்கவில்லை. ஹைதராபாதில் அவரின் இறுதிச்சடங்கு நடந்தது.
இப்போது, மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைக்கப்பட்ட போது, காந்தி குடும்பத்தினர் ஒருவர் கூட அங்கு இல்லை. அதேபோல், இறுதிச்சடங்கு நிகழ்ச்சி மத்திய அரசால் முறையாக கையாளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன்.
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

