அறிவுஜீவிகள் பயங்கரவாதிகளாக மாறுவது ஆபத்தானது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
அறிவுஜீவிகள் பயங்கரவாதிகளாக மாறுவது ஆபத்தானது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
ADDED : நவ 20, 2025 06:16 PM

புதுடில்லி: '' அரசின் பணம் மூலம் டாக்டர்கள் மற்றும் இன்ஜினியர் பட்டம் பெறுபவர்கள், தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது,'' என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு டில்லியில் போராட்டம் நடந்தது. பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கலவரத்தின் போது 50 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமார், என்வி அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ வாதாடியதாவது: அரசின் நிதியுதவியை பயன்படுத்தி அறிவுஜீவிகள் டாக்டர்கள் ஆகின்றனர். பிறகு அவர்கள் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு எனக்கூறினார்.
மேலும், இமாம் பேசிய வீடியோ ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகையில், இமாம் பொறியியல் பட்டதாரி. தற்போது டாக்டர்களும், இன்ஜினியர்களும் தங்களது துறைகளில் பணியில் ஈடுபடாமல், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. கலவரம் என்பது திட்டமிட்ட சதி எனவும் தெரிவித்தார்.

