UPDATED : பிப் 01, 2024 06:37 PM
ADDED : பிப் 01, 2024 01:17 PM

புதுடில்லி: பார்லி.,யில் இன்று (பிப்ரவரி 01) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
2047க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைவோம் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார்
இந்த அரசு சிறப்பாக மக்கள் பணி செய்து வருகிறது. மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
இந்தியாவின் பொருளாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் நிதி அமைச்சரின் பட்ஜெட் உள்ளது. இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.
விளம்பரங்கள்
கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், பட்ஜெட் குறித்து சிறந்த விளம்பரங்கள் உள்ளன. ஆனால் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை என்றார்.
பா.ஜ., எம்.பி., சவுத்ரி
லோக்சபா தேர்தலுக்கு பிறகு நாட்டை சிறப்பாக வழி நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும்.
பட்ஜெட் பற்றாக்குறை
காங்.,எம்.பி மணீஷ் திவாரி கூறுகையில், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் 18 லட்சம் கோடி பட்ஜெட் பற்றாக்குறை உள்ளது. தனது செலவுக்காக மத்திய அரசு கடன் வாங்குகிறது என்றார்.
ம.பி., துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா
நாட்டின் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் பலன் அடையும் வகையில் பட்ஜெட் உள்ளது.
பா.ஜ., எம்.பி பூனம் மகாஜன்
பெண்கள் நாட்டை வழிநடத்திச் செல்வதன் மூலம் நாடு முன்னேற வேண்டும். பிரதமர் மோடி தலையிலான பா.ஜ., ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
எந்த பலனும் இல்லை
இது குறித்த காங்.,எம்.பி கவுரவ் கோகோய் கூறுகையில், இடைக்கால பட்ஜெட்டில், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றார்.
அன்னிய முதலீடு
காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறுகையில், பட்ஜெட் உரையில் முதலீடு கணிசமான அளவு குறைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளாமல் அன்னிய முதலீட்டைப் பற்றி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட். இந்தியா இப்போது முன்னேறி உள்ளது.
மத்திய அமைச்சர் வி.கே சிங்
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது.
உண்மையான பட்ஜெட் வரும் !
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், உண்மையான பட்ஜெட் ஜூலையில் வரும். மக்கள் பயனடைவார்கள். தொழில்கள் வளரும். நாடு முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
இந்த பட்ஜெட்டுக்காக நான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். எந்த துறையையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா பெருமிதம்
இது குறித்து அமித்ஷா கூறியிருப்பதாவது: அமிர்த காலத்தின் போது ஒவ்வொரு துறையிலும் பாரதத்தை முதன்மையான தேசமாக மாற்றுவதற்கான பயணத்தில் பா.ஜ., அரசு கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த மைல்கற்களை பட்ஜெட் எடுத்துரைக்கிறது.
இந்த சாதனைகளின் அடித்தளத்தில், விக்சித் பாரத் என்ற பிரம்மாண்டமான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. சிறப்பாக தேசத்தை வழி நடத்தியதற்காக மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
தமிழகத்தை புறக்கணிக்கும் பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழகத்தை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட். ஆட்சி காலம் முடியப்போகிறது என்ற அலட்சியம் தான் பட்ஜெட்டில் தெரிகிறது.
சலுகைகள் ஏதுமில்லை. சாதாரண, சாமானிய ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான எந்தவித அறிவிப்பும் இல்லை.
எடை போட்டு பார்க்க ஏதுமில்லா வெற்று அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக அளித்துள்ளது நிதிநிலை அறிக்கை என முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.