பயணிக்க வேண்டிய அகிம்சை வழி -சர்வதேச அகிம்சை தினம்-
பயணிக்க வேண்டிய அகிம்சை வழி -சர்வதேச அகிம்சை தினம்-
UPDATED : அக் 02, 2011 07:47 AM
ADDED : அக் 02, 2011 01:00 AM

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று (அக்.,2) 'சர்வதேச அகிம்சை தினமாக' உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அகிம்சை போராட்டங்கள் மூலம் அறவழியில் நமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தார். இவரது அகிம்சை தான் இன்றைய உலகுக்கு அவசிய தேவை. இதை உணர்த்தும் விதமாக இவரது பிறந்த நாளையொட்டி சர்வதேச அகிம்சை தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு இத்தினம் உணர்த்துகிறது.
அகிம்சை வழியில்... : தங்களது உரிமைகளை, கோரிக்கைகளை வன்முறை வழியில் அடையாமல் அறவழியில் செல்வதே அகிம்சை. எவருக்கும் துன்பமோ, காயமோ, உயிரிழப்போ ஏற்படக் கூடாது என்பதுதான் இதன் முக்கிய நோக்கம். இன்று உலகில் வன்முறை செயல்கள் அதிகரித்து விட்டது. இதனால் உயிர், உடமைகள் பறிக்கப்பட்டு அமைதி கெடுகிறது. இன்றைய சூழலில் ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடனான பிரச்னைகளை போர் மூலம் தீர்க்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி உருவாகும். அகிம்சை வழியில் போராடி நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த காந்தியின் வழியில் பயணிப்போம்.
'மகாத்மாவே எங்கள் ஆத்மா'
'ஓ மகாத்மாவே உன்னையே நினைத்து வாடுகின்றோம்'
பிற ஆத்மாக்களுடன் எங்கெல்லாமோ உன்னைத் தேடுகின்றோம்
உனைப் போல் இங்கு ஒருவரும் இன்று இல்லையே
சுதந்திரமே பறிபோகுமோ என்ற அச்சத்தால் தொல்லையோ
உன்னிடம் கண்ட ஒழுக்கும், தூய்மை, நேர்மை, உண்மை, சிக்கனம்,
இவை இன்று வலம் வரும் எவரிடமாவது இருக்கின்றனவா?
ஓ காந்தியே, அன்று வெள்ளையனையே நீ வெளியேற்றினாய்
இன்று ஒரு கொள்ளையனைக் கூட பிடிக்க முடியவில்லையே
'பயங்கரவாதம் நம் நாட்டுக்கு ஒரு பெரிய சவால்
தீவிரவாதத்தால் நாட்டின் வளர்ச்சியே இன்று திவால்
'புற்றுநோய் உடலில் துரிதமாய் பரவுவது போல்,
தீவிரவாதம் உலகெங்கும் தீவிரமடைந்துள்ளதே
கைகுண்டு கூட இன்று கடைச்சரக்காயிற்றே
எங்கு குண்டு வெடிக்குமெனத் தெரியவில்லையே?
என்னதான் இதற்கு முடிவுயெனப் புரியவில்லையே?
'ஜனநாயக நாட்டுக்கு இன்றும் தாங்க முடியாத தொல்லையே'
'ஓ காந்தி இன்று இந்தியாவுக்கு வேண்டியது ஓம் சாந்தி
''மகாத்மாவின் புகழ் அறியாதவர் பூமியில் உண்டோ?
''ஓ மகாத்மாவே, நீ இன்று மறுபிறவி எடுத்திடல் வேண்டும்
,உயிர் துடித்து மடியும் மக்களை மீட்டிடல் வேண்டும்.'
- வஜ்ரா எஸ்.கிருஷ்ணன், மதுரை

