ADDED : ஜூன் 12, 2025 01:32 AM
புதுடில்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாகவும், விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து இப்பணியை செய்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய தயாராக இருந்தனர்.
இதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் வாயிலாக இந்திய நேரப்படி நேற்று மாலை 5:30 மணிக்கு இவர்கள் புறப்பட திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ராக்கெட்டின் பூஸ்டர் நிலையின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டது.
அப்போது, திரவ ஆக்சிஜன் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கசிவை, சரிசெய்ய ஸ்பேஸ் எக்ஸ் குழுவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால், பால்கன் - 9 ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இக்குழு, கடந்த மாதம் 29ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், அப்பயணம் கடந்த 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
எனினும், மோசமான வானிலை காரணமாக அத்திட்டமும் தள்ளிப்போனது. தற்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.