ADDED : ஜன 03, 2024 01:15 AM

மூணாறு:கேரளாவில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களில் மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் முதலிடம் வகிக்கிறது.
கேரளாவில் சுற்றுச் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த நாள் முதல் தேக்கடி முதலிடம் வகித்தது. சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களில் பார்வையாளர் எண்ணிக்கை, வருவாய், பராமரிப்பு அடிப்படையில் தரவரிசை தேர்வு செய்யப்படுகிறது. தேக்கடியில் 2022- -2023ல் வருவாய் ரூ.9 கோடியாக இருந்தது.
அதனை இரண்டாம் இடத்திற்கு தள்ளி இரவிகுளம் முதலிடத்தை பிடித்தது. வரையாடு, நீலக்குறிஞ்சி மையமான இரவிகுளம் தேசிய பூங்காவில் ராஜமலைக்கு வரையாடுகளை காண பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அப்பகுதி இரவிகுளம் சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு உட்பட்டதாகும்.
வசதிகள்
வரையாடு, டிரக்கிங், எக்கோ டிரைவ், பஸ் சவாரி, ஆர்கிட்டோரியம், பன்னல் செடிகள், மூலிகை செடிகள் சேகரிப்பு, நீலக் குறிஞ்சி பூங்கா, சுற்றுச்சூழல் கடைகள், மலைவாழ் மக்களிடம் சேகரிக்கப்பட்ட ஆர்கானிக் பொருட்கள் விற்பனை மையம், முதலுதவி மையம், இயற்கையான குடிநீர், வீடியோ பதிவு மூலம் விளக்கம், பேட்டரி கார், ஷெல்பி பாய்ன்ட், பிளாஸ்டிக் தடை, ஆன் லைன் முன்பதிவு, இ-டாய்லெட் ஆகிய வசதிகள் சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ளன.
அங்கு வனத்துறை அதிகாரிகள் 39 பேரும், தற்காலிக ஊழியர்கள் 180 பேரும் பணியாற்றுகின்றனர்.
இரவிகுளத்திற்கு 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 5.5 லட்சம் பயணிகள் வருகை தந்தனர்.
அதன் மூலம் ரூ.12 கோடிக்கு அதிகமாக வருவாய் கிடைத்தது. 2023 மார்ச்க்கு பிறகு தற்போது வரை 6 லட்சம் பயணிகள் சென்றனர்.
அதனால் வரும் மார்ச் கணக்குப்படி வருவாய் ரூ.16 கோடியை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.