கோலார், சிக்கபல்லாப்பூருக்கு கிருஷ்ணா நீர் கிடைக்குமா?
கோலார், சிக்கபல்லாப்பூருக்கு கிருஷ்ணா நீர் கிடைக்குமா?
ADDED : அக் 25, 2024 07:44 AM
காமசமுத்ரா: கோலார், சிக்கபல்லாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு கிருஷ்ணா நதி நீர் வழங்க கோரி ஆந்திர மாநில அரசை கோருவோம் என்று கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு தெரிவித்தார்.
பங்கார்பேட்டை தாலுகா, ம.ஜ.த., - பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று காமசமுத்ராவில் நடந்தது. இதில், ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபு பேசியதாவது:
கோலார் மாவட்டத்தில் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க, மத்திய தொழில் துறை அமைச்சர் குமாரசாமி உதவியுடன் தொழிற்சாலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொழிற் பூங்கா அமைப்பது குறித்து தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வதந்திகளை பரப்பி வருகிறார். ஆனால் உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது.
விரைவில் உண்மை தெரியும். மாலுார் வரை புறநகர் ரயில்வே திட்டம் உள்ளது. இதை பங்கார்பேட்டை வரை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன்.
கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கிருஷ்ணா நதி நீர் வழங்க கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இது மட்டுமின்றி கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்ட இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை சந்தித்து கிருஷ்ணா நதி நீர் வழங்க கோர உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., எம்.நாராயணசாமி, கோலார் மாவட்ட பா.ஜ., செயலர் மகேஷ், கவுன்சிலர் சந்திரா ரெட்டி, பங்கார்பேட்டை தொகுதி பா.ஜ., தலைவர் சம்பங்கி ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

