இந்தியாவில் மூடப்படுகிறதா 'ஒன்பிளஸ்' நிறுவனம்? சி.இ.ஓ., திடீர் விளக்கம்
இந்தியாவில் மூடப்படுகிறதா 'ஒன்பிளஸ்' நிறுவனம்? சி.இ.ஓ., திடீர் விளக்கம்
ADDED : ஜன 22, 2026 12:10 AM
புதுடில்லி: 'மொபைல் போன்' தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள, 'ஒன்பிளஸ்' நிறுவனம், நம் நாட்டில் செயல்பாடுகளை நிறுத்தப் போவதாக தகவல் பரவிய நிலையில், 'அது முற்றிலும் வதந்தி' என, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான, சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரி ராபின் லியு விளக்கம் அளித்துள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த ஒன்பிளஸ் நிறுவனம், நம் நாட்டில் மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென்று தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. 'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஐ - போன்'களுக்கு நிகராக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கருதப்படுகின்றன.
சமீபத்தில், 'ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ்' என்ற இணையதளம் வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த 2024ல், ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் போன் விற்பனை சரிந்துள்ளது. மேலும், 'ஒன்பிளஸ் ஓப்பன் 2' போன்ற தயாரிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
'அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், ஒன்பிளஸ் குழுக்களும் குறைக்கப்பட்டுள்ளன. முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பிராந்திய அலுவலகங்கள் இழந்து விட்டன. அனைத்து அதிகாரங்களும் சீனாவுக்கு மாற்றப்பட்டுள்ளன' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால், நம் நாட்டில் ஒன்பிளஸ் நிறுவனம் மூடப்பட உள்ளதாக, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து, சமூக வலைதளத்தில், ஒன்பிளஸ் இந்தியா சி.இ.ஓ., ராபின் லியு நேற்று வெளியிட்ட பதிவு:
இந்தியாவில், ஒன்பிளஸ் நிறுவனம் மூடப்பட உள்ளதாக பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல தொடரும். சமூக வலைதளங்களில் பரவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.

