ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் தற்காலிகமாக நிறுத்தம்: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் தற்காலிகமாக நிறுத்தம்: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
ADDED : ஜூலை 11, 2025 10:07 PM

புதுடில்லி: இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐபிஎல் எப்படியோ அப்படித்தான் கால்பந்து ரசிகர்களுக்கு ஐஎஸ்எல் தொடர். கால்பந்து போட்டிகளுக்காகவே நடத்தப்படும் இந்த தொடருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம்.
ஆண்டுதோறும் செப்டம்பர்-ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இந்த தொடர் நடத்தப்படுவது வழக்கம். வெகு விரைவில் நடப்பு தொடர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2025-26ம் ஆண்டுக்கான போட்டித்தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றின் மூலமாக வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடையேயான மாஸ்டர் ரைட்ஸ் ஒப்பந்தம் புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைகள் முடங்கி உள்ளன. அதன் காரணமாக 2025-26ம் ஆண்டுக்கான ஐ.எஸ்.எல்., தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
2010ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இதுதொடர்பான ஒப்பந்தம், வரும் டிச.15ம் தேதியுடன் காலாவதியாகிறது. அதன் பின்னர் ஒப்பந்தத்தை புதுப்பித்தாகவேண்டும். ஆனால், அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தவறியதால் பேச்சுவார்த்தைகள் தாமதமாகி உள்ளன.
ஆகையால் 2025-26ம் ஆண்டு கால்பந்து தொடரை திட்டமிட்டப்படி,வணிக ரீதியாக நடத்தமுடியுமா என்பதை உறுதியாக கூறமுடியாது. எனவே, இப்போதுள்ள சூழலில் கால்பந்து தொடரை நடத்தமுடியாது என்பதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக போட்டி தொடர் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை கடிதமாக அனைத்து கால்பந்து கிளப்களுக்கும், விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.