ADDED : ஜன 24, 2026 03:28 AM

புதுடில்லி: காசா புனரமைப்பு பணிக்காக, அமெரிக்கா சார்பில் சர்வதேச அமைதி வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வரும்படி, அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, இரண்டு ஆண்டுகள் நீடித்த போர், கடந்தாண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், 20 அம்ச காசா அமைதி திட்டத்தை அறிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, காசாவில் அமைதியை ஏற்படுத்துவது, புனரமைப்பு பணிகள் மேற் கொள்வது போன்றவற்றுக்காக, சர்வதேச அமைதி வாரியம் அமைக்கப்படும் என, அறிவித்தார். டிரம்ப் தலைமையிலான இந்த வாரியத்துக்கான உறுப்பினர்களையும் அவர் அறிவித்தார்.
இதற்கிடையே, இதில் இணையும்படி, இந்தியா உட்பட 60 நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதில், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்தாலும், இதுவரை எந்த பதிலும் கூறாமல் இந்தியா மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியை, இஸ்ரேலுக்கு வரும்படி அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அவரது பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்தப் பயணம், அடுத்த மாதம் மேற் கொள்ளப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதரகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 'பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அரசு அழைப்பு விடுத்தது உண்மை தான். ஆனால் பயண தேதி இன்னும் உறுதியாக தெரியவில்லை' என்றார்.

