பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ., துவக்குகிறது ஒரு மாதம் பிரசாரம்!
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ., துவக்குகிறது ஒரு மாதம் பிரசாரம்!
UPDATED : செப் 09, 2026 11:19 PM
ADDED : செப் 09, 2026 08:44 PM
புதுடில்லி: அரசு தலைமைப் பொறுப்பில், பிரதமர் நரேந்திர மோடி, 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான வரும், 17 முதல், ஒரு மாத காலத்துக்கு, 'சேவா சங்கல்ப் அபியான்' எனப்படும், 'சேவை உறுதிமொழி' என்ற இயக்கத்தை நடத்த பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இளம் தலைமுறையினரை கவர பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
குஜராத் முதல்வராக, 2001, அக்., முதல் 2014, மே 21 வரை, அதாவது, 13 ஆண்டுகள் பா.ஜ., மூத்த தலைவர் மோடி, 75, பதவி வகித்தார். 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்றதை அடுத்து, அதே ஆண்டின் மே மாத இறுதியில், நாட்டின் பிரதமராக முதன்முறையாக அவர் பதவியேற்றார். 2019, 2024ல் நடந்த லோக்சபா தேர்தல்களிலும் தே.ஜ., கூட்டணி வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.
இந்நிலையில், குஜராத் முதல்வராக, 13 ஆண்டுகள், நாட்டின் பிரதமராக, 12 ஆண்டுகள் என, அரசு தலைமைப் பொறுப்பில், பிரதமர் மோடி மொத்தம், 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை குறிப்பிடும் வகையில், அவரது பிறந்த நாளான வரும் 17 முதல், ஒரு மாத காலத்துக்கு, சேவை உறுதிமொழி இயக்கம் என்ற பெயரில் நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் நேற்று கூறியதாவது:
சாதாரண தொண்டராக பயணத்தை தொடங்கிய மோடி, இன்று நாட்டின் பிரதமராக அயராது பணியாற்றி வருகிறார். சமூக வாழ்க்கையில் தரமான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார்; மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை, 25 கோடி ஏழை குடும்பங்கள் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளன. மோடி பிரதமரான போது, நாட்டின் கொள்கை மிகவும் பலகீனமாக இருந்தது; பொருளாதாரமும் மங்கிப் போயிருந்தது.
ஆனால் தற்போது, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக நம் நாடு உருவெடுத்துள்ளது. உலக அரங்கில் நம் நாட்டின் அந்தஸ்தும், கவுரவமும் உயர்ந்துள்ளது. 37க்கும் மேற்பட்ட நாடுகள், தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்துள்ளன. அவரது சிறந்த தலைமை பண்பை பாராட்டி, இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு தலைமைப் பொறுப்பில், பிரதமர் மோடி, 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான வரும், 17 முதல் ஒரு மாத காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 17ம் தேதி சேவை தினமாக கடைப்பிடிக்கப்படும்.
நாடு முழுதும் ரத்த தான முகாம்கள் நடக்கும். அன்றைய தினம் மாலை, விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடக்கும். அரசு திட்டங்களின் பயனாளிகளும், பா.ஜ., தொண்டர்களும், பிரதமர் மோடியின் பொது சேவைக்கு நன்றி தெரிவித்து விளக்கேற்றுவர்.
அக்., 7ல், பிரதமர் மோடி, அரசு தலைமைப் பொறுப்பில், 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அன்றைய தினம், 'சேவா சங்கல்ப் அபியான்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஒரு முக்கிய நிகழ்ச்சி நடத்தப்படும். மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபயணங்கள், பைக் மற்றும் சைக்கிள் பேரணிகள் நடத்தப்படும்.
வரும் 17 - அக்., 7 வரை பள்ளிகளில் ஓவியம், பேச்சுப் போட்டிகள் பா.ஜ., சார்பில் நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் சான்றிதழ்கள் வழங்குவர். அனைத்து கிராமங்களிலும் சுகாதார முகாம்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படும்.
இளைஞர்கள், மாணவர்கள், ஸ்டார்ட் -அப்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கார்ப்பரேட் கண்டுபிடிப்பாளர்களுக்காக, 'சேவா பர்ஸ்ட் இன்னோவேஷன் சேலஞ்ச்' போட்டியும் நடத்தப்படும். தவிர, அனைத்து மாவட்டங்களிலும் அக்., 2ல், துாய்மைப் பணி நடக்கும். இளம் தலைமுறையினரை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அவர்களுக்கு நாட்டின் வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
