பழங்கால ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க மறுத்தால் சிறை: கர்நாடகாவில் வருகிறது புதிய சட்டம்
பழங்கால ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க மறுத்தால் சிறை: கர்நாடகாவில் வருகிறது புதிய சட்டம்
ADDED : ஜன 14, 2026 02:34 AM

பெங்களூரு: கர்நாடகாவில், பழங்கால ஆவணங்களான ஒலைச்சுவடிகள், ஏடுகள் உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை அரசிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஞான பண்டாரா ஒலைச்சுவடிகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
தனி நபர்கள், அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் வசம் இருக்கும் பழங்கால ஆவணங்களை பெற்று, அதை டிஜிட்டல்மயமாக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, தனி நபர்கள், நிறுவனங்கள் வசம் இருக்கும் பழங்கால ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகள், ஏடுகள் ஆகியவற்றை இச்சட்டம் அமலான ஓராண்டுக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
தவறினால், மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தவிர, அபராதமும், சிறை தண்டனையும் சேர்ந்து வழங்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.
கர்நாடக பொக்கிஷங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள், ஏடுகள் உள்ளிட்ட பழங்கால ஆவணங்களை வேண்டு மென்றே சேதப்படுத்தினாலோ, அழித்தாலோ அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலோ அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இது குறித்து கர்நாடக சுற்றுலா, சட்டம் மற்றும் சட்டசபை விவகாரங்கள் துறை அமைச்சர் பாட்டீல் கூறுகையில், ''கர்நாடகாவின் வரலாற்று ஆவணங்களை போற்றி பாதுகாக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
''முக்கியமான பல எழுத்து பொக்கிஷங்களை நாம் இழந்து விட்டோம். எஞ்சி இருப்பதையாவது, டிஜிட்டலில் பதிவேற்றி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் கலாசாரம், வரலாறு பாதுகாக்கப்படும்,'' என்றார்.
பழங்காலத்தில் எழுதப்பட்ட கையெழுத்து பிரதிகள், பனை ஓலைச்சுவடிகள், காகிதம், செப்பு பட்டயம், கல்வெட்டு என எந்த வகையில் இருந்தாலும், சமஸ்கிருதம், கன்னடம், பாலி, தமிழ், தெலுங்கு, அரபு, பெர்ஷியா, சாரதா அல்லது வேறு எந்தவொரு இந்திய மொழி, அன்னிய மொழிகளில் எழுதப்பட்டு இருந்தாலும், ஓவியமாக தீட்டப்பட்டு இருந்தாலும் அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை பண்டைய அறிவுசார் சொத்தாக பாதுகாக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

