ADDED : ஆக 09, 2025 07:13 AM
சீதாமர்ஹி : பீஹாரில், சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள ஜானகி கோவில் புனரமைப்பு பணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடிக்கல் நாட்டினார்.
பீஹாரில், சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் அங்கு வளர்ச்சித் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன.
சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள புனவுரதம் பகுதி, சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இங்கு, சீதா தேவிக்கு ஜானகி மந்திர் என்ற பெயரில் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 883 கோடி ரூபாய் செலவில் புனரமைக்க, கடந்த மாதம் 1ல் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ஜானகி கோவிலில், புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.