நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்; பிரதமரை வலியுறுத்தும் ஐக்கிய ஜனதா தளம்
நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்; பிரதமரை வலியுறுத்தும் ஐக்கிய ஜனதா தளம்
UPDATED : ஜன 10, 2026 05:45 PM
ADDED : ஜன 10, 2026 05:17 PM

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா விருதை தரவேண்டும் என்று பிரதமர் மோடியை ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் கே.சி. தியாகி வலியுறுத்தி உள்ளார்.
பீஹார் முதல்வராக இருப்பவர் நிதிஷ்குமார். அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது அவரின் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் விருப்பம் ஆகும். கடந்தாண்டு பல சந்தர்ப்பங்களில் இந்த விருப்பத்தை வெளிப்படுத்திய அவர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியே போஸ்டர்களை ஒட்டினர்.
இந் நிலையில், நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா விருதை தரவேண்டும் என்று பிரதமர் மோடியை ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் கே.சி. தியாகி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
இதே கோரிக்கையை, மத்திய அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதசார்பற்ற) கட்சியின் நிறுவனருமான ஜிதன் ராம் மஞ்சியும் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாரத ரத்னா நிதிஷ்குமார் அவர்களே என்று அழைப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கும் அல்லவா? தனது முடிவுகளால் அனைவரையும் பிரமிக்க வைக்கும் பிரதமர் மோடி. பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் நாட்டையே பிரமிக்க வைப்பார், பாரத ரத்னா நிதிஷ்குமார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பாரத ரத்னா கோரிக்கைகள் வலுத்துக் கொண்டே வரும் அதே வேளையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ராஜிவ் ரஞ்சன், கே.சி. தியாகியின் கருத்துக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளார்.

