ADDED : அக் 31, 2024 01:02 AM

கொச்சி ; கங்குவா திரைப்படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப், 43, குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் கொச்சி பனம்பில்லி நகரைச் சேர்ந்தவர் நிஷாத் யூசுப். இவர், தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மலையாள திரையுலகில் தல்லுமாலா, உண்டா, ஒன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு எடிட்டராக நிஷாத் யூசுப் பணியாற்றி உள்ளார். இதில், தல்லுமாலா திரைப்படத்திற்கு கடந்த 2022ல் கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதை பெற்றார்.
தற்போது தயாராகி வரும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி படங்களுக்கும் எடிட்டராக பணிபுரிந்து வந்த இவர், தமிழில் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் எடிட்டராகவும் பணியாற்றினார். இந்நிலையில், தன் வீட்டில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மர்மமான முறையில் நிஷாத் யூசுப் இறந்து கிடந்தார்.
போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக நிஷாத் யூசுப் தற்கொலை செய்து கொண்டதாகவும், எனினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தான் முழு விபரம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

