'மனித வெடிகுண்டாக மாற தயார்' கர்நாடக அமைச்சர் ஆவேசம்
'மனித வெடிகுண்டாக மாற தயார்' கர்நாடக அமைச்சர் ஆவேசம்
ADDED : மே 04, 2025 01:10 AM

பெங்களூரு: “நாம் இந்தியர்கள். எங்களுக்கும், பாகிஸ்தானுக்கும் சம்பந்தம் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அனுமதி அளித்தால், என் உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு, யுத்தத்துக்கு செல்வேன்,” என, கர்நாடகா வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
தற்கொலை படை
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், கர்நாடகா வீட்டு வசதித்துறை அமைச்சருமான ஜமீர் அகமது கான் விஜயநகராவில் நேற்று கூறியதாவது:
நாம் இந்தியர்கள். ஹிந்துஸ்தானிகள். எங்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு அமைச்சராக எந்த யுத்தத்துக்கும் நான் தயார்.
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எனக்கு அனுமதி அளிக்கட்டும்; என் உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு, தற்கொலை படையாக மாற, நான் தயார்.
நடவடிக்கை
யுத்தம் நடக்கட்டும். நாமும் செல்லலாம். நான் இதை வேடிக்கைக்காக சொல்லவில்லை. இந்த நாட்டுக்காக எப்படிப்பட்ட தியாகத்துக்கும் தயார். எனக்கு அனுமதி அளித்தால், யுத்தம் நடத்த நானும் பாகிஸ்தானுக்கு செல்வேன்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அப்பாவி பொது மக்களை கொன்றது, ஈனத்தனமான செயல்.
இவர்களுக்கு எதிரான போராட்டத்தில், ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்க வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பாக, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

