மலையாள மொழி மசோதாவுக்கு எதிர்ப்பு கேரள கவர்னர் தலையிட கர்நாடகா மனு
மலையாள மொழி மசோதாவுக்கு எதிர்ப்பு கேரள கவர்னர் தலையிட கர்நாடகா மனு
ADDED : ஜன 09, 2026 02:20 AM

பெங்களூரு: கேரள அரசு கொண்டு வந்த மலையாள மொழி மசோதா - 2025க்கு, கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இம்மசோதா, காசர்கோடு மாவட்டத்தில் வசிக்கும் கன்னட மொழி சிறுபான்மையின மக்களை பெரிதாக பாதிக்கும் என கவலை தெரிவித்து, கேரள கவர்னரிடம் மனு அளித்துள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், கன்னட மொழி பேசும் மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா முழுதும் உள்ள பள்ளிகளில் மலையாள மொழியை முதல் பாடமாக கட்டாயமாக்கும் வகையில், கேரள அரசு மலையாள மொழி மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், இம்மசோதா காசர்கோட்டில் வசிக்கும் கன்னட மொழி சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது என, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள கர்நாடக எல்லை பகுதிகள் மேம்பாட்டு ஆணைய பிரதிநிதிகள், கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர். அப்போது இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து கர்நாடக எல்லை பகுதிகள் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கேரள அரசு கொண்டு வந்த மசோதா அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது.
கடந்த 2017ல் இதே போன்று ஒரு மசோதா கொண்டு வரப்பட்டபோது, அதை ஜனாதிபதி நிராகரித்தார்.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறையும், மொழி சிறுபான்மையின மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என, கேரள அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது. மலையாள மொழி மசோதா நிறைவேற்றப்பட்டால், மலையாளம் தெரியாத கன்னட மாணவர்கள் பெரிதாக பாதிக்கப்படுவர்.
எனவே, கவர்னரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தோம். கேரள அரசு கொண்டு வந்த மசோதாவை முழுதாக ஆராயப் போவதாக கவர்னர் உறுதி அளித்தார். மேலும், காசர்கோடு கன்னட மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

