கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு
கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு
ADDED : ஏப் 23, 2024 02:58 PM

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் பிஆர்எஸ் கட்சி எம்.பி.,யும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர்.
இருவரும் திஹார் சிறையில், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கவிதாவின் ஜாமின் மனு மே 2ம் தேதி அன்று டில்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய கெஜ்ரிவாலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில் கெஜ்ரிவால் மற்றும் கவிதா ஆகியோரின் நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மே 7 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

