ADDED : செப் 23, 2024 01:21 AM

புதுடில்லி, செப். 23-
டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.
அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கு ஐந்து கேள்விகளை எழுப்பினார்.
கேள்விகள் என்ன?
1 அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர், 75 வயதில் ஓய்வு பெற்றனர். பா.ஜ.,வின் இந்த விதி, மோடிக்கு பொருந்தாது என அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
2 எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்களை ஊழல்வாதிகள் என, பா.ஜ., அழைக்கிறது. பின், அவர்களையே கட்சியில் இணைத்துக் கொள்கிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
3 'பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., தேவையில்லை' என அக்கட்சி தலைவர் நட்டா கூறிய போது, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
4 விசாரணை அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சிகளை உடைத்து, ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ., தற்போது செய்து வரும் அரசியல், உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
5பா.ஜ.,வின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., தன் குழந்தை தவறு செய்யும்போது, கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தாய்க்கு உள்ளது. மகன் தற்போது பெரிய மனிதராகி விட்டார். அவர் தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்க வேண்டியது உங்கள் பொறுப்பு இல்லையா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கெஜ்ரிவால் பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக, ஆம் ஆத்மி அரசை கண்டித்து, ஜந்தர் மந்தரில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள கனாட் பிளேஸ் என்ற இடத்தில், நேற்று பா.ஜ., போராட்டம் நடத்தியது.