வீட்டு வேலை செய்பவர்களுக்கு கெஜ்ரிவால் 7 வாக்குறுதிகள்
வீட்டு வேலை செய்பவர்களுக்கு கெஜ்ரிவால் 7 வாக்குறுதிகள்
ADDED : ஜன 30, 2025 11:07 PM
டில்லி சட்டசபைத் தேர்தலில் வாக்குறுதி மழை கொட்டி வருகிறது. அரசு அதிகாரிகளின் குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்பவர்களை குறிவைத்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு, வேலை நேரத்துக்கான உத்தரவாதம் உள்ளிட்ட ஏழு வாக்குறுதிகளை நேற்று அறிவித்தார்.
டில்லி சட்டசபைக்கு வரும் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக டில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியை கைப்பற்ற பா.ஜ.,வும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும் குறிவைத்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துள்ளன. எப்போதும் இல்லாத வகையில் இலவச அறிவிப்புகளால் டில்லி வாக்காளர்களை அரசியல்வாதிகள் திக்குமுக்காடச் செய்துள்ளனர்.
இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அடுத்த வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். எம்.பி.,க்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் வீட்டு வேலை செய்பவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வேலை நேர விதிகள் உட்பட ஏழு உத்தரவாதங்களை நேற்று செய்தியாளர்களிடம் அவர் அறிவித்தார்.
அவர் கூறியதாவது:
அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரவர்க்கத்தின் வீடுகளில் பணிபுரியும் வீட்டு உதவியாளர்களில் 70 முதல் 80 சதவீதம் பேருக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு வேலைக்காரர் குடியிருப்புகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
தங்கள் வீட்டுப் பணியாளர்களை தங்க வைப்பதற்காக இந்த குடியிருப்புகளை சில எம்.பி.,க்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

