சபரிமலை டைரியில் கேரள முதல்வர் படம்: புதிய நடைமுறையால் எதிர்ப்பு
சபரிமலை டைரியில் கேரள முதல்வர் படம்: புதிய நடைமுறையால் எதிர்ப்பு
ADDED : ஜன 04, 2024 07:10 AM

சபரிமலை: சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள 2024 டைரியில் மார்க்சிஸ்ட் அரசின் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் படங்கள் இடம்பெற்றுள்ளன. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் படங்கள் முதல் முறையாக இதில் அச்சிடப்பட்டதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சபரிமலையில் மண்டல, - மகர விளக்கு கால சீசனை ஒட்டி திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஐயப்பன் கோயிலை மையமாக கொண்டு டைரி அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.
இதில் சபரிமலை நடை திறப்பு மற்றும் அடைக்கும் நாட்கள், பூஜை விபரங்கள், பூஜை கட்டணம் உள்ளிட்ட சபரிமலை தொடர்பான அனைத்து விபரங்களும் கேரளாவில் உள்ள முன்னணி கோயில்கள் மற்றும் சுவாமி படங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் படங்களும் இருக்கும். கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறைதான் வழக்கத்தில் இருந்தது.
முதல்வர், அமைச்சர் படம்
ஆனால் 2024க்கான டைரியில் கணபதி, ஐயப்பன், சித்திரை திருநாள் பாலராம வர்மா ராஜா ஆகியோரின் படங்களை தொடர்ந்து ஆறாவது பக்கத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன், தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த், உறுப்பினர்கள் அஜிகுமார், சுந்த ரேசன் ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன.
சபரிமலை டைரியில் முதல்வர், அமைச்சர் படங்கள் இதுவரை இடம் பெற்றதில்லை.
முதல்வர் பினராயி விஜயன் ஒருமுறை சபரிமலை வந்தபோது ஐயப்பன் சன்னிதானம் முன் வந்து உள் கோயிலை பார்த்தாரே தவிர கையெடுத்து வணங்கவில்லை.
அதுபோல தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மேல் சாந்தி வழங்கிய தீர்த்தத்தை குடிக்காமல் கையால் துடைத்த வீடியோ வைரலானது. கடவுள்களின் படங்கள் அதிகமாக உள்ள சபரிமலை டைரியில் இறைபக்தி இல்லாதவர்களின் படங்கள் சேர்த்துள்ளதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . ஆனால் இது ஒரு சாதாரண நடைமுறைதான் என்று தேவசம்போர்டு கூறுகிறது.