10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கிறது கேரளா
10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கிறது கேரளா
ADDED : பிப் 01, 2026 12:15 AM

கொல்லம்: ''கேரளாவில், மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 25 சதவீதம் வரை குறைக்கப்படும்,'' என, மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தின் தேவலக்கரைப் பகுதியைச் சேர்ந்த மிதுன், 13, என்ற மாணவன், அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு, பள்ளி வளாகம் அருகே கிடந்த மின் கம்பி மீது எதிர்பாராதவிதமாக விழுந்ததில், அவர் உயிரிழந்தார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மிதுன், தன் குடும்பத்திற்காக சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன், தன் வீட்டு வெளிப்புற சுவரில் வீடு படம் ஒன்றையும் வரைந்து வைத்திருந்தார். இதை அறிந்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, மிதுன் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் வீடு கட்டித் தரப்படும் என உறுதியளித்தார்.
இதன்படி, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டை மிதுனின் குடும்பத்தாரிடம் அமைச்சர் சிவன்குட்டி நேற்று ஒப்படைத்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாணவன் மிதுனின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தினாலும், அவரது கனவை நிறைவேற்றும் வகையில், அவரது குடும்பத்தினரிடம் புதிய வீட்டை ஒப்படைத்துள் ளோம். இதேபோல் கல்விச் சுமை அதிகமாக உள்ளதாக மாணவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இதைக் கருத்தில் வைத்து, வரும் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பாடத்திட்டக்குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் மாற்றப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

