ADDED : பிப் 01, 2026 12:06 AM

தானே: மஹாராஷ்டிராவில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி, போலீஸ் அதிகாரிகள் உட்பட 11,000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை ஏமாற்றி, 500 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த சமீர் நர்வேகர், அவரது மனைவி நேகா மற்றும் அவர்களின் கூட்டாளி அமித் பாலவ் ஆகியோர் இணைந்து, 2019ல் புனேவை தலைமையிடமாக கொண்டு முதலீட்டு நிறுவனத்தை துவக்கினர்.
அங்குள்ள மக்களிடம், மாதந்தோறும் 4 சதவீத வருமானம் ஈட்டித் தருவதாக உறுதியளித்ததுடன், மேலும் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்காக, அந்நிறுவனம் மாதந்தோறும் கிட்டத்தட்ட 10 சதவீத வருமானத்தை ஈட்டுவதாகக் காட்டியது.
அவர்களின் பேச்சைக் கேட்டு, அந்நிறுவனத்தில் 1,500 போலீசார் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், உள்ளூர் மக்கள் என 11,000க்கும் மேற்பட்டோர் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். இந்நிலையில், சமீபத்தில் அந்நிறுவனம் மூடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், அந்த தம்பதியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள், போலீசில் புகார் அளித்த நிலையில் இவ்வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதி மற்றும் கூட்டாளி உட்பட மூன்று பேரை, அண்டை மாநிலமான குஜராத்தில் கைது செய்தனர்.
கைதான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர்களின் வங்கி கணக்குகள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

