'தி கேரளா ஸ்டோரி - 2' படத்துக்கு தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
'தி கேரளா ஸ்டோரி - 2' படத்துக்கு தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
UPDATED : பிப் 27, 2026 05:30 AM
ADDED : பிப் 27, 2026 02:32 AM

திருவனந்தபுரம்: தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம் தொடர்பான அனைத்து மனுக்களும் விசாரித்து முடிக்கும் வரை, அப்படத்தை வெளியிட தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ல், சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம், தி கேரளா ஸ்டோரி . கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவியர் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதே இப்படத்தின் கதை.
கடும் எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு நடுவே இப்படம் வெளியானது. இருப்பினும், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் இரு தேசிய விருதுகளை வென்றது.
இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாக ம் தயாரானது. 'தி கேரளா ஸ்டோரி - 2: கோஸ் பியாண்ட்' என்ற பெயரில் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவான இப்படத்தை, காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீ பத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
கண்டனம்
குறிப்பாக, ஹிந்து பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சியை உண்ண வைக்கப்படும் காட்சி, பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் கண்டனத்திற்குள்ளானது. இந்த காட்சிகளை நீக்க வலியுறுத்தியும், திரைப்படத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரியும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, மத்திய அரசின் தணிக்கை வாரியம் படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழை வழங்கியது. இதையடுத்து, தி கேரள ஸ்டோரி - 2 இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் தணிக்கை வாரிய சான்றிதழை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'இந்த படம் கேரளாவை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காட்டுகிறது. மாநிலத்தையும், மாநில மக்களையும் அவமதிக்கிறது. 'இந்த படம் வெளியானால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு, நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பொதுவாக நீதிமன்றங்கள் கலை வெளிப்பாட்டில் தலையிடுவதில்லை. இந்த படத்தை பொறுத்தவரை கேரள மக்களின் கவலையையும் புறக்கணிக்க முடியாது. படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், அது குறித்த கவலையை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். இந்த படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் எப்படி சான்றிதழ் அளித்தது என தெரியவில்லை.
வழிகாட்டுதல்
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றவில்லை. இந்த படம் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரித்து முடிக்கும் வரை இரு வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படும். மேலும், சமூக வலைதளங்களில் இருந்து படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை நீக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, தி கேரளா ஸ்டோரி - 2 படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

