கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி; திருவனந்தபுரம் மேயர் பதவியை கைப்பற்றியது பாஜ
கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி; திருவனந்தபுரம் மேயர் பதவியை கைப்பற்றியது பாஜ
UPDATED : டிச 13, 2025 05:46 PM
ADDED : டிச 13, 2025 12:53 PM

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கூட்டணி தன்வசப்படுத்தி இருக்கிறது.
கேரள சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம், 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியைக் காட்டிலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியே பெரும்பான்மையை இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4ல் முன்னிலை வகிக்கிறது. கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர் ஆகிய 4 மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றுகிறது. ஆளும் இடதுசாரி கூட்டணி கோழிக்கோடு மாநகராட்சியில் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னாள் டிஜிபி வெற்றி
அதேபோல, திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜ தன்வசப்படுத்துகிறது. மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜ கூட்டணி 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜ சார்பில் போட்டியிட்ட முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா, இங்குள்ள சாஸ்தமங்கலம் வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 941 கிராம ஊராட்சிகளில், ஐக்கிய முன்னணி 492ல் வெற்றி பெற்றுள்ளது. இடது முன்னணி 347 ஊராட்சிகளையும், பாஜ., 25 ஊராட்சிகளையும் கைப்பற்றியுள்ளன. 64 ஊராட்சிகளில் கட்சிகள் சம பலத்துடன் இருக்கின்றன.
மொத்தமுள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துகளில், ஐக்கிய முன்னணி 8 பஞ்சாயத்துகளிலும், இடது முன்னணி 6 பஞ்சாயத்துகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
81 வட்டார ஊராட்சிகளில் ஐக்கிய முன்னணியும், 63 வட்டார ஊராட்சிகளில் இடது முன்னணியும் வெற்றி பெற்றுள்ளன.
87 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 28 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு, இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

