கோல்கட்டாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை: மம்தா அதிர்ச்சி
கோல்கட்டாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை: மம்தா அதிர்ச்சி
ADDED : ஆக 10, 2024 03:47 PM

கோல்கட்டா: கோல்கட்டா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு படித்த 31 வயதான அந்த மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, படித்து முடித்துவிட்டு இரவு உணவை சாப்பிட தாமதமாக சென்றார். அதன் பிறகு மறுநாள் காலையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது பிறப்புறப்பு, முகம்,உதடு,கழுத்து, வயிறு மற்றும் கைகளில் காயம் இருந்தது. இதனால், அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. அந்த மாணவியின் உடலை 3 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபருக்கும், மருத்துவ கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஆனால் அவர் உள்ளே எளிதாக சென்று வர அனுமதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
முதல்வர் அதிர்ச்சி
இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, இழிவானது. கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. டாக்டரின் குடும்பத்தினருடன் பேசி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., கண்டனம்
மாநில எதிர்க்கட்சி தலைவரான பாஜ.,வின் சுவேந்து அதிகாரி கூறுகையில், இச்சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.