கூடங்குளம் அணு உலைகள் விரைவில் முழு செயல்பாட்டுக்கு வரும் பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பின் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
கூடங்குளம் அணு உலைகள் விரைவில் முழு செயல்பாட்டுக்கு வரும் பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பின் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
ADDED : டிச 06, 2025 12:36 AM

புதுடில்லி: டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ''இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை, 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
''கூ டங்குளத்தில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் கட்டும் முதன்மை திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். ஆறு அணு உலைகளில் ஏற்கனவே இரண்டு எரிசக்தி கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள நான்கு உலைகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்,'' என் றார்.
வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்கள் அரசு முறைப் பயணமாக, நம் நாட்டுக்கு வந்த ரஷ்ய அதிபர் புடினை, தலைநகர் டில்லியில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் நேரில் வரவேற்றார். தொடர்ந்து, தன் இல்லத்தில் அவருக்கு விருந்தளித்தார்.
அப்போது, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட, 'பகவத் கீதை' புத்தகத்தை புடினுக்கு மோடி பரிசளித்தார்.
இந்நிலையில் நேற்று, ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்தார். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஹைதராபாத் இல்லத்தில், 23வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி மற்றும் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும், சந்தை அணுகலை எளிதாக்கவும், பொருளாதார வேகத்தை அதிகரிக்கவும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்தும் விவாதித்தனர். தொடர்ந்து, வர்த்தகம், சுகாதாரம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி பேசியதாவது:
வர்த்தகம், முதலீட்டை அதிகரிக்கு ம் நோக்கில், 2030 பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளோம்.
இரு நாடுகளின் தொழில்களுக்கு இடையே இணை உற்பத்தி, இணை கண்டுபிடிப்புகளை வலுப்படுத்த, இந்தியா - -ரஷ்யா வர்த்தக மன்றத்தில், இந்தியா தீவிரமாக பங்கேற்கும்.
சர்வதேச வடக்கு- - தெற்கு போக்குவரத்து வழித்தடம், வடக்கு கடல் வழித்தடம், சென்னை - விளாடிவோஸ்டாக் கடல் இணைப்பு போன்ற முக்கிய இணைப்பு வழித்தடங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவை வினியோகத் தொடர்களை மறுவடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும்.
ரூ.9 லட்சம் கோடி கூட்டணியின் முக்கிய பகுதியாக, கப்பல் கட்டுமானம் இருக்கும். இது, 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு நேரடியாக உதவுவதுடன், உள்நாட்டில் வேலைகள் மற்றும் புதிய திறன்களை உருவாக்கும்.
அணுசக்தி ஒத்துழைப்பு, அரியவகை கனிமங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு தொடரும். உக்ரைன் விவகாரத்தில், இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; அமைதியின் பக்கம் நிற்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது:
ரஷ்யா - இந்தியா கூட்டணியின் முக்கிய துாண்களாக, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளன. கூட்டு திட்டங்களுக்கு ரஷ்ய கரன்சியான, 'ரூபிள்' பயன்படுத்தப்படுவது நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
எரிவாயு, எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றின் நம்பகமான சப்ளையராக, ரஷ்யா எப்போதும் இருக்கும். அவற்றை தொடர்ந்து ஏற்றுமதி செய்யவும் தயாராக உள்ளோம்.
கூடங்குளத்தில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டும் முதன்மை திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அங்கு, ஆறு அணு உலைகளில் ஏற்கனவே இரண்டு எரிசக்தி வலை யமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு உலைகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன.
இந்த அணுமின் நிலையத்தை முழு மின் உற்பத்திக்கு கொண்டு வருவது, இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
இது, இந்திய நுகர்வோர் மலிவான மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்த உதவும்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், கடந்த ஆண்டு, 12 சதவீதம் அதிகரித்து, 5.76 லட்சம் கோடி ரூபாய் எட்டியுள்ளது. இதை, 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நி ர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, 2026ல் ரஷ்யாவில் நடக்கும் 24வது இந்தியா - ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டுக்கு வரும்படி, பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்தார்.
டொயோட்டா பார்ச்சுனர் காரில்
புடின் - மோடி பயணித்தது ஏன்?
வழக்கமாக, நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் குண்டு துளைக்காத காரில் பயணிப்பர். ஆனால், ரஷ்ய அதிபர் புடினோ, 'டொயோட்டா' நிறுவனத்தின், 'பார்ச்சூனர்' காரில், பிரதமர் மோடியுடன் பயணித்தார். 'ரேஞ்ச் ரோவர், மெர்சிடஸ்' போன்ற கார்களுக்கு பதிலாக, இந்த காரில் இருவரும் பயணித்தனர். 'சம்பிரதாயத்துக்காக அல்ல, நட்பின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இரு தலைவர்கள் பயணிக்கும் போது, கணிக்க முடியாத வாகனங்களை பயன் படுத்த சிறப்பு பாதுகாப்பு குழு விரும்புகிறது' என, உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைவர்கள் சந்திப்புக்கு பின் வெளியிடப்பட்ட
கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
வரும் 2030க்குள் இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை, 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயம் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பது, தொழில் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட வழிகளில் வர்த்தகத்தை சம நிலையுடன் விரிவுபடுத்த இலக்கு நிர்ணயம் தடையற்ற வர்த்தக முறையை உறுதிப்படுத்த, சுங்கவரி மற்றும் சுங்கவரி அல்லாத வர்த்தக தடைகளை நீக்குவது, தளவாட சிக்கல்களை தீர்ப்பது, தடையற்ற பணம் செலுத்தும் வழிமுறைகளை உறுதி செய்வது தொடர்பாக பேச்சு இந்தியாவில் சிறிய மற்றும் மிதக்கும் அணுமின் நிலையங்களை கட்ட ரஷ்யா ஒத்துழைக்கும் ரஷ்ய குடிமக்களுக்கு 30 நாட்கள் இ - சுற்றுலா விசா கூடங் குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்கவும், உபகரணங்கள், எரிபொருளை வழங்கவும் ரஷ்யா உறுதி 2047-க்குள் இந்தியாவின் அணுசக்தித் திறனை 100 ஜிகா வாட்டாக அதிகரிக்க முடிவு 'ககன்யான்' உட்பட மனித விண்வெளி பயணத் திட்டங்கள், செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மற்றும் கிரக ஆய்வு ஆகியவற்றில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் இணைந்து செயல்படும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யா முழு ஆதரவு பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராட முடிவு.
கார்கே, ராகுலுக்கு 'நோ'
சசி தரூருக்கு அழைப்பு
ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு, இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. அதே சமயம், காங்., மேலிடம் மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சியின் லோக்சபா - எம்.பி., சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று அவர் பங்கேற்றார்.
'அமெரிக்கா வாங்கலாம்
இந்தியா வாங்கக்கூடாதா?'
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்கா, இந்தியா மீது, 50 சதவீத வரி விதித்தது. இதனால் நம் ஏற்றுமதி யாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: அமெரிக்காவே அதன் சொந்த அணுமின் நிலையங்களுக்காக எங்களிடம் இருந்து தான் எரிபொருளை கொள்முதல் செய்து வருகிறது. அந்நாடு வாங்கும் போது, எங்களிடம் இந்தியா வாங்கக் கூடாதா? இதென்ன நியாயம்? இந்த விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அரசியல் காரணங்களுக்காக, அந்நாட்டுக்கு எதிராக வேண்டுமென்றே செயற்கையான தடைகளை உருவாக்குகின்றனர். மேற்கத்திய தடைகள் மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்பால், இந்தியா - ரஷ்யா இடையேயான எரிசக்தி ஒத்துழைப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அது நிலை யாக அப்படியே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூடங்குளம் 3வது அணு உலைக்கு
ரஷ்யா எரிபொருள் சப்ளை
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படுகிறது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நோக்கில் ரஷ்யா உதவியுடன் ஆறு அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் இரு அணு உலைகள் மின் உற்பத்தியை துவங்கியதை அடுத்து, 2013 மற்றும் 2016ல், இவை இந்திய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டன. மற்ற நான்கு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் மூன்றாவது அணு உலை செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது அணு உலைக்கான அணு எரிபொருள் முதல் தொகுதி கூடங்குளத்துக்கு வந்துள்ளது. இது குறித்து ரஷ்ய அணுசக்தி கழகமான, 'ரோஸாட்டம்' நேற்று வெளியிட்ட அறிக்கை: ரஷ்யாவை சேர்ந்த, 'நோவோசிபிர்ஸ்க் கெமிக்கல் கான்ஸன்ட்ரேட்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள எரிபொருள் தொகுதிகள் ரோஸாட்டமின் சரக்கு விமானம் மூலம் கூடங்குளம் வந்துள்ளது. இந்த அணு உலைக்கான எரிபொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏழு விமானங்களில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா இடையே கையெழுத்தான ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த ஆண்டு இவை கொண்டு வரப்படுகின்றன. இதில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைக்கான தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி சாதனங்கள் முழுதும் அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

