ADDED : நவ 30, 2024 07:59 AM

பெங்களூரு: 'பெங்களூரு புறநகரில், மீண்டும் சிறுத்தை நடமாடுகிறது. எனவே அப்பகுதி மக்கள், தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.
பெங்களூரு ரூரல், நெலமங்களாவின் சிவகங்கை மலை அடிவாரத்தில் அண்மையில் சிறுத்தை நடமாடியது. நவம்பர் 18ம் தேதி, கம்பாளு கொல்லரஹட்டி கிராமத்தின் கரியம்மா என்பவரை கொன்று, உடலை சிறுத்தை இழுத்துச் சென்றது.
பீதியடைந்த மக்கள், சிறுத்தையை பிடிக்கும்படி, வனத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
வனத்துறையினரும், சிறுத்தை அதிகம் நடமாடிய சிவகங்கை வனப்பகுதியில் பல இடங்களில் கூண்டு வைத்தனர். வனத்துறை ஊழியர்களும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர். நவம்பர் 25ம் தேதி அதிகாலை, கூண்டில் சிறுத்தை சிக்கியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், பெங்களூரு புறநகர், ஆனேக்கல்லின், ஜிகனி அருகில் நிசர்கா லே - அவுட், லோட்டஸ் லே - அவுட் சுற்றுப்பகுதிகளில் சிறுத்தை நடமாடும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர், நேற்று முன் தினம் இரவு சிறுத்தையை தேடினர் ஆனால் எங்கும் தென்படவில்லை.
எனவே, 'நிசர்கா லே - அவுட், லோட்டஸ் லே - அவுட் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும், தனியாக நடமாட வேண்டாம். இரவில் தேவையின்றி வெளியே வரக்கூடாது. சிறு குழந்தைகளை வெளியே விட வேண்டாம்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.