UPDATED : ஜன 06, 2024 04:04 PM
ADDED : ஜன 06, 2024 01:53 PM

புதுடில்லி: ‛‛ நீதிக்கான உரிமை கிடைக்கும் வரை எனது பயணம் தொடரும் என உறுதியளிக்கிறேன்'' என காங்கிரஸ் எம்.பி.,ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரை ராகுல் தலைமையில் யாத்திரை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதற்கு, ‛பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' என பெயரிடப்பட்டது.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாங்கள் எங்கள் சொந்த மக்களை நோக்கி திரும்பவும் வருகிறோம். அநீதிக்கும், ஈகோவுக்கும் எதிராக நீதி என்ற முழக்கத்தை எழுப்புவோம். நீதிக்கான உரிமை கிடைக்கும் வரை பயணம் தொடரும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
லோகோ வெளியீடு
இதனிடையே ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை'க்கான லோகோ மற்றும் கோஷத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால் ஆகியோர் வெளியிட்டனர்.
பிறகு, கார்கே கூறுகையில், ராகுல் தலைமையில், வரும் 14ம் தேதி முதல் 2வது பாதையாத்திரையை துவக்குகிறோம். இந்த யாத்திரையானது, மக்களுக்கு பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் நீதி வழங்குவதற்கான ஒரு வலிமையான நடவடிக்கையாக இருக்கும். பார்லிமென்டில் பேசி மக்கள் பிரச்னைகளை எழுப்ப முயன்றோம்.
ஆனால், அரசு அதற்கு வாய்ப்பு தரவில்லை. நாட்டின் வரலாற்றில் 146 எம்.பி.,க்கள் முதல்முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், இந்த யாத்திரையை துவக்குகிறோம். இவ்வாறு கார்கே கூறினார்.