தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு: ராகுல்
தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு: ராகுல்
UPDATED : ஏப் 05, 2024 01:14 PM
ADDED : ஏப் 05, 2024 12:50 PM

புதுடில்லி: தேர்தலுக்கு பிறகு, ‛ இண்டியா ' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்களுக்கும், அதனை பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கும் இடையே தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை ரீதியில் நாம் போராட ‛ இண்டியா' கூட்டணி முடிவு செய்துள்ளது. பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.
அதானி ஏகபோக உரிமை
பிரதமர் மோடி, பாஜ, ஆர்எஸ்எஸ்.,ன் திட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். துறைமுகம், உள்கட்டமைப்பு, பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் எப்படி அதானி ஏகபோக உரிமை கொண்டாடி வருகிறாரா, அதேபோல் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் பிரதமர் மோடியும் அரசியல் நிதியில் பிரதமர் மோடியும் ஏகபோக உரிமை செலுத்தி வருகிறார்.
ஊழல் செய்பவர்கள் பா.ஜ.,வில் இணைவதாக கார்கே கூறினார். இதற்கு, அரசியல் நிதியில் தொடர்ந்து ஏகபோக உரிமை செலுத்த பிரதமர் மோடியும் முயற்சிப்பது காரணம் ஆகும். இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் உருவாக்கவில்லை.
மக்கள் தான் உருவாக்கினர். நாங்கள் அறிக்கையை மட்டும் தான் எழுதினோம். ஆயிரகணக்கான மக்களிடம் கருத்து கேட்ட பிறகு இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

