குடியரசு தின அலங்கார ஊர்தி: மஹாராஷ்டிராவுக்கு முதலிடம்
குடியரசு தின அலங்கார ஊர்தி: மஹாராஷ்டிராவுக்கு முதலிடம்
UPDATED : ஜன 30, 2026 06:11 AM
ADDED : ஜன 30, 2026 12:37 AM

புதுடில்லி: நடப்பாண்டின் குடியரசு தின விழா அணிவகுப்பில் முப்படைகளில், இந்திய கடற்படை சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில், மஹாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி முதல் பரிசை வென்றது.
இதேபோல் மத்திய அமைச்சகங்கள் பிரிவில், வந்தே மாதரம் பாடலின் 150ம் ஆண்டு பாரம்பரியத்தை கொண்டாடிய கலாசார அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது.
நாட்டின் 77வது குடியரசு தின நிகழ்ச்சிகள், தலைநகர் புதுடில்லியில் உள்ள கடமை பாதையில் கடந்த 26ம் தேதி வெகு விமரிசையாக நடந்தன.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த குழுக்களின் விபரத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதன் விபரம்: முப்படைகளில் சிறந்த அணிவகுப்பு குழுவிற்கான முதல் பரிசை, கடற்படையின் அணிவகுப்பு குழு வென்றது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திப் பிரிவில், நவீனத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் கலவையாக இருந்து விநாயகர் ஊர்வலத்தை பறைசாற்றிய மஹாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி முதல் பரிசை வென்றது.
இரண்டாம் பரிசு, ஜம்மு - காஷ்மீருக்கும்; மூன்றாம் பரிசு, கேரளாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சகங்களில், கலாசார துறையின் அலங்கார ஊர்தி சிறந்ததாக தேர்ந் தெடுக்கப்பட்டது. இதற்கான விருதுகள், டில்லியில் இன்று வழங்கப்பட உள்ளன.

