ADDED : ஜன 14, 2025 05:45 AM
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன. 14) மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனையும் நடக்கிறது.
சபரிமலையில் மகர விளக்கு காலத்தின் முக்கிய நிகழ்வாக மகரஜோதி தரிசனம் இன்று மாலை நடக்கிறது. மகர சங்கரம பூஜை இன்று காலை 8:45 மணிக்கு நடக்கிறது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து தூதர் மூலம் கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் நேரடியாக அபிஷேகம் செய்யப்படும். இதற்காக இன்று காலை உஷபூஜைக்காக நிறுத்தப்படும் நெய்யபிஷேகம் மகர சங்கரம பூஜைக்கு பின்னரே தொடங்கும்.
மதியம் உச்ச பூஜைக்கு பின்னர் நடை அடைத்து மாலை 3:00 மணிக்கு பதிலாக 5:00 மணிக்கு திறக்கப்படும். சிறிது நேரத்தில் திருவாபரணங்களை வரவேற்க சரங்குத்திக்கு செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் மாலை அணிவித்து வழி அனுப்பி வைப்பார்.
பந்தளத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். அங்கு தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் பெரிய நடை பந்தல் வழியாக 6:25 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்துவர்.
இந்த நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்கும். பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தரும்.
இதை கண்டு தரிசிப்பதற்காக ஐந்து நாட்களாக சன்னிதானத்தில் பக்தர்கள் ஏராளமானோர் முகாமிட்டுள்ளனர். பாண்டித்தாவளம், கொப்பரை களம், மாளிகைபுறம், இன்சினேட்டர், வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் செடி கொடி, இலைகள், துணிகள், போன்றவற்றால் தற்காலிக ஷெட்டுகள் அமைத்து தங்கி உள்ளனர்.
மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்கள் திருவாபரணங்கள் அணிந்த ஐயப்பனை தரிசிக்க முண்டியடிக்கும் போது நெரிசல் ஏற்பட்டு விடாமல் தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு பாதைகளை தேர்வு செய்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10:00 மணி வரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் திருவாபரண பவனி சரங்குத்தி வந்தடைந்த பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
டிச.15 காலை 3:00 முதல் 6:00 மணி வரை ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் காலை 6:00 மணிக்கு பின்னர் பம்பைக்கு வந்தால் போதுமானது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதுபோல பத்தனம் திட்டா மற்றும் நிலக்கல்லிருந்து பம்பைக்கு தனியார் வாகனங்கள் நாளை அதிகாலை வரை வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு பஸ்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடு பணிகளில் ஐந்தாயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.