ஆன்லைனில் ரூ.73.27 லட்சம் மோசடி; மலப்புரம் வாலிபர் கைது
ஆன்லைனில் ரூ.73.27 லட்சம் மோசடி; மலப்புரம் வாலிபர் கைது
ADDED : அக் 10, 2025 12:00 AM

பாலக்காடு; வீ ட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி, 73.27 லட்சம் ரூபாய் மோசடி செய்த மலப்புரம் வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பகுதியை சேர்ந்தவர், பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரில், 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, 73.27 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக தெரிவித்தார்.
மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மலப்புரம் பெருவள்ளூர் பகுதியை சேர்ந்த சுதீஷ்பாபு, 40, என்பவரை நேற்று கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது:
கடந்த, 2024 டிச., மாதம் இந்த மோசடி நடந்துள்ளது. 'டெலிகிராம்' ஆப் வாயிலாக, புகார்தாரரை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்த படியே 'ஷேர் டிரேடிங் ' செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி யுள்ளனர்.
அதை நம்பி, 'டெபாசிட்' தொகையாக, 73.27 லட்சம் ரூபாயை, சுதீஷ்பாபு என்பவர் பெற்று, மோசடி செய்துள்ளார். 'ஆன்லைன்' வாயிலாக பணத்தை பெற்று, அந்த பணத்தில், ஒரு தொகையை பரப்பனங்காடி பகுதியில் உள்ள அவரது மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.
இவ்வழக்கு தவிர, அவர் மீது கொலை முயற்சி, அடிதடி உட்பட, 14 வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சுதீஷ்பாபு கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு, கூறினார்.