ADDED : பிப் 04, 2026 12:55 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் அதிருப்தியில் உள்ள திரிணமுல் காங்., கட்சி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக, 'இண்டி' கூட்டணி கட்சியினரிடமும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்ந்து மேற்கு வங்கத்திற்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்தச் சூழலில், நேற்று முன்தினம் டில்லி சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமை தேர்தல் கமிஷனர் உள்பட மூன்று தேர்தல் கமிஷனர்களை சந்தித்து பேசினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து அவர்களிடம் குரலை உயர்த்தி பேசியதுடன், மேஜையை பலமாக தட்டி ஆவேசத்தில் கத்தியதாக கூறப்படுகிறது.
அதற்கு, சட்டப் படியே தேர்தல் கமிஷன் பணியாற்றி வருவதாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் அமைதியாக அவருக்கு விளக்கம் அளித்துள்ளார். எனினும், மம்தா பானர்ஜியுடன் சென்ற திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தலைமை தேர்தல் கமிஷனரையும், தேர்தல் கமிஷனையும் மிரட்டும் தொனியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து, 'இண்டி' கூட்டணி தலைவர்களிடம் மம்தா விவாதிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நடத்தும் விதம் தவறாக இருக்கிறது. எனவே, அவரை பதவி நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாட்டு குடிமக்களின் ஓட்டு உரிமைகளை பறிக்கும் வகையில், அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

