ADDED : நவ 12, 2024 06:06 AM

பாகலுார்: தனியார் பஸ் கிளீனர்கள் இருவரை மரக்கட்டையால் அடித்து கொன்ற, இன்னொரு கிளீனர் கைது செய்யப்பட்டார். கொலைகாரன், திருடன் என்று கிண்டல் செய்ததால் கொன்றது அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு, பாகலுார் அருகே சிக்கசந்திராவில் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கான ஷெட் உள்ளது.
இங்கு பஸ் கிளீனர்களாக ராம் நகரின் நாகேஷ், 41, மாண்டியாவின் மஞ்சு, 44 ஆகியோர் வேலை செய்தனர். கடந்த 9ம் தேதி காலை ஷெட் அருகே உள்ள கூடாரத்தில் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
மது பாட்டில்களும் அருகில் கிடந்ததால், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்தது தெரிந்தது. பாகலுார் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், இரட்டை கொலை தொடர்பாக, ஷெட்டில் வேலை செய்த இன்னொரு கிளீனர் சுரேஷ், 38 என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்பும் இரட்டை கொலை வழக்கு, பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அவர், கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார்.
பின், கே.ஆர். மார்க்கெட்டில் கொத்தமல்லி தழை விற்பனை செய்து பிழைப்பு நடத்தினார். உறவினர் ஒருவர் மூலம் ஷெட்டில் கிளீனர் வேலை கிடைத்தது.
கொலை செய்யப்பட்ட நாகேஷும், மஞ்சுவும், சுரேஷை பார்த்து அடிக்கடி கொலைகாரன், திருடன், பலாத்கார நபர் என்று கூறி கேலி, கிண்டல் செய்துள்ளனர். இது, சுரேஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
கடந்த 8ம் இரவு மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போதும் சுரேஷை கொலைகாரன் என்று இருவரும் கிண்டல் செய்ததால், அவர்களை மர கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு செய்த இரட்டை கொலை வழக்கில், சுரேஷுக்கு ஜாமின் கிடைத்தாலும், பிணைய தொகையான 3 லட்சம் ரூபாய் செலுத்த முடியாததால் சிறையிலேயே இருந்தார்.
இது பற்றி அறிந்த நடிகர் துனியா விஜய், சுரேஷை ஜாமினில் வெளியே எடுக்க பிணைய தொகையாக 3 லட்சம் ரூபாய் கட்டியது தெரியவந்துள்ளது.

