ADDED : மார் 19, 2025 03:06 AM
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் கொல்லம் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலியின் தம்பியை குத்திக் கொன்ற காதலன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் உளிய கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் கோமஸ் மகன் பெபின் ஜார்ஜ், 21. இரண்டாம் ஆண்டு பி.சி.ஏ. படித்து வந்தார்.
இவரது அக்கா, கொல்லம் நீண்டகரை பகுதியைச் சேர்ந்த மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ., ராஜுவின் மகன் தேஜஸ் ராஜுவை காதலித்தார்.
இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
அதன்பின் தேஜஸ் ராஜுவுடனான தொடர்பை அவர் துண்டித்தார். பலமுறை போனில் தொடர்பு கொண்ட போதும் அந்தப் பெண் போனை எடுக்கவில்லை.
இதனால், காதலியின் வீட்டுக்குச் சென்ற தேஜஸ் ராஜ், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கேட்டார்.
வீட்டில் இருந்தவர்கள் மறுத்ததால் ஆத்திரமடைந்திருந்த தேஜஸ் ராஜ், நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் காதலி வீட்டுக்கு மீண்டும் சென்றுள்ளார்.
அங்கு வீட்டில் இருந்த காதலியின் தம்பி பெபின் ஜார்ஜை கத்தியால் சரமாரியாக குத்தினார். அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது தந்தை ஜார்ஜ் கோமசுக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின் காரில் ஏறி தப்பிய தேஜஸ் ராஜ், செம்மான் முக்கு பகுதியில், கை நரம்பை அறுத்து, ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.
பலத்த காயம் அடைந்த ஜார்ஜ் கோமஸ் மற்றும் பெபின் ஜார்ஜ் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பெபின் ஜார்ஜ் இறந்தார். ஜார்ஜ் கோமஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.