பொறுப்பற்ற தன்மை; பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பஞ்சாப் முதல்வருக்கு மத்திய அரசு கண்டிப்பு
பொறுப்பற்ற தன்மை; பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பஞ்சாப் முதல்வருக்கு மத்திய அரசு கண்டிப்பு
ADDED : ஜூலை 11, 2025 07:11 AM

புதுடில்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவற்றை பொறுப்பற்றவை, வருந்தத்தக்கவை என கடுமையாக விமர்சித்தது.
கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேலி செய்திருந்தார். இது குறித்த அவர் கூறியதாவது:
பிரதமர் எங்கோ சென்றுவிட்டார். அது கானா என்று நினைக்கிறேன். அவர் திரும்பி வரப் போகிறார், அவர் வரவேற்கப்படுகிறார். அவர் எந்த நாடுகளுக்குச் செல்கிறார் என்பது கடவுளுக்குத் தெரியும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அவர் தங்கவில்லை.
10,000 மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்கிறார், அங்கு அவருக்கு 'மிக உயர்ந்த விருதுகள்' கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: உலக தெற்கில் இருந்து நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து உயர் மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்த சில கருத்துக்களை நாங்கள் கண்டோம். இந்தக் கருத்துக்கள் பொறுப்பற்றவை மற்றும் வருந்தத்தக்கவை.
நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இத்தகைய தேவையற்ற கருத்துகளுக்கும், மத்திய அரசிற்கும் தொடர்பில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.