இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்; சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்… இவர் யார் தெரியுமா?
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்; சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்… இவர் யார் தெரியுமா?
ADDED : அக் 01, 2025 10:44 PM

சென்னை: இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் இடம்பிடித்துள்ளார்.
2025ம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியல் இன்று வெளியாகியது. இதில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி 9.55 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். ரூ. 8.15 லட்சம் கோடியுடன் தொழிலதிபர் அதானி, இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பரும் இடம்பிடித்துள்ளார். ரூ.21,190 கோடி சொத்துடன் இவர் இந்தப் பட்டியலில் அங்கம் வகிக்கிறார். 'பெர்ப்ளெக்சிட்டி' ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமாக இருந்து வரும் இவர், இந்தியாவின் முன்னணி இளம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
யார் இவர்?
1994ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி சென்னையில் பிறந்த இவர், சிறு வயது முதலே அறிவியல் மீது அதிக ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து வந்தார். சென்னை ஐஐடியில் படித்தபோது, 'ரெயின்போர்ஸ்மென்ட் லேர்னிங்' பற்றிய பாடங்களை கற்பித்தார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கம்ப்யூட்டர் விஷன், இமேஜ் ஜெனரேஷன், வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
ஓபன்ஏஐ, டீப்மைண்ட் மற்றும் கூகுள் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
ஆகஸ்ட் 2022ல் டெனிஸ் யாரட்ஸ் மற்றும் ஆன்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தை நிறுவினார்.இந்த நிறுவனம் ஏஐ சார்ந்த சாட் பேஸ்டு தேடுபொறியை வழங்குகிறது, இது பயனர்களின் கேள்விகளுக்கு விரைவான, துல்லியமான மற்றும் நம்பகமான பதில்களை வழங்கும்.