சும்மானாச்சும் புகார்; குலைநடுங்க வைத்த சிறுமி; கொந்தளித்தது உ.பி., போலீஸ்
சும்மானாச்சும் புகார்; குலைநடுங்க வைத்த சிறுமி; கொந்தளித்தது உ.பி., போலீஸ்
ADDED : ஆக 23, 2024 07:43 AM

ஜான்சி: உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தததாக நாடகமாடிய சிறுமியின் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
புகார்
ஜான்சியில் சிறுமி ஒருவரை காரில் கடத்திச் சென்று இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். நாட்டில் ஆங்காங்கே, கற்பழிப்பு சம்பவங்களும், ஆவேச போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், இந்த புகார் வந்தவுடன் போலீசாருக்கு குலை நடுங்கி விட்டது.
உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நாடகம்
சிறுமியை யாரும் கடத்தவும் இல்லை; கற்பழிக்கவும் இல்லை, காதலனை கரம் பிடிப்பதற்காக, சிறுமி போட்ட நாடகம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
திடுக்கிடும் தகவல்
ஜான்சி எஸ்.எஸ்.பி., ராஜேஷ் கூறியதாவது: வெள்ளை நிற காரில் இரண்டு பேர் தன்னை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் கொடுத்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரித்தோம். அதில், பல்வேறு தகவல்கள் பொய்யானவை என தெரிய வந்துள்ளது.
திருமணம்
சிறுமியின் குடியிருப்பு அருகே உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்த போது, வெள்ளை நிறத்தில் கார் ஏதும் அப்பகுதியில் செல்லவில்லை. சிறுமி தனியாக சுற்றித் திரிந்துள்ளார். அவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதற்கு அவரது அத்தையும், அவரது மகனும் உடந்தையாக இருந்துள்ளனர். காதலனின் வருகைக்காக கோட்டை பகுதிக்கு, நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார். ஆனால், காதலன் வராததால் மீண்டும் அத்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
வழக்குப்பதிவு
சிறுமி அளித்த புகார் பொய் என தெரிய வந்துள்ளதால், போக்சோ வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
'பொய்யான புகார் கொடுத்து போலீசாரை அலைக்கழிக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற கடுமையான குற்றங்கள், நடக்காமலேயே நடந்ததாக புகார் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று' என்று எஸ்.பி., வருத்தத்துடன் தெரிவித்தார்.

