தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டிரம்ப் 4 முறை போனில் அழைத்தும் மோடி புறக்கணிப்பு

டிரம்ப் 4 முறை போனில் அழைத்தும் மோடி புறக்கணிப்பு

டிரம்ப் 4 முறை போனில் அழைத்தும் மோடி புறக்கணிப்பு


UPDATED : ஆக 28, 2025 03:36 PM

ADDED : ஆக 26, 2025 11:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2025 03:36 PM ADDED : ஆக 26, 2025 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக நம் நாட்டு இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர் நான்கு முறை போனில் அழைத்தும் அந்த அழைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி புறக்கணித்ததாக ஜெர்மனியின் முன்னணி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நட்புறவு, அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால் சமீப காலமாக பதற்றத்தில் உள்ளது.

அமலுக்கு வந்தது


அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை கொண்ட நாடுகளுக்கு பரஸ்பர வரியை அவர் விதித்துள்ளார். அந்த வகையில், இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்தார். இது, கடந்த 7ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக, 25 சதவீத வரியை விதித்தார். இது, இன்று அமலுக்கு வர உள்ளது. இந்த கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது என கூறிய நம் வெளியுறவு அமைச்சகம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக விளக்கமளித்தது.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு இடையிலும் ரஷ்யாவிடம் தொடர்ந்து நாம் எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறோம். ஒருபுறம் வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது. அவர்கள் அமெரிக்காவின் வேளாண் தொழில்களுக்கு இந்திய சந்தையை திறந்து விட வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர்.

இதனால், உள்ளூர் தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என கூறி, இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெர்மனியில் வெளியாகும் 'பிராங்பர்டர் ஆல்கைமனே' எனும் முன்னணி பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில், 'பிரதமர் மோடியிடம் பேச அமெரிக்க அதிபர் டிரம்ப் நான்கு முறை போனில் அழைத்தும், அதை மோடி புறக்கணித்தார்' என குறிப்பிட்டுள்ளனர்.

ஜெர்மனி பத்திரிகையில் வெளியான கட்டுரையில் மேலும் கூறியுள்ளதாவது:அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக மோதலில், சர்வதேச நாடுகளிடம் பொதுவாக கடைப்பிடிக்கும் உத்தி, முதலில் சம்பந்தப்பட்ட நாட்டின் மீது புகார் கூறுவது, மிரட்டுவது, நெருக்கடி கொடுப்பது, அதன் பின் பணிய வைப்பதே. ஆனால், அவருடைய இந்த யுக்தி, இந்தியாவிடம் எடுபடவில்லை. இந்தியாவின் ஏற்றுமதிகளில் ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்காவுக்கு செல்கிறது. டிரம்பின் வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறையக் கூடும்.

வரியை குறைக்க வேண்டும் என்றால், இந்தியாவின் சந்தையை அமெரிக்காவின் வேளாண் தொழில் நிறுவனங்களுக்கு திறந்து விட வேண்டும் என அதிபர் டிரம்ப் அழுத்தம் தருகிறார்.

ஏற்கவில்லை


இதற்கு எதிராக பிரதமர் மோடி உள்ளார். இந்த சூழலில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசுவதற்காக, கடந்த இரண்டு வாரங்களில் நான்கு முறை தொடர்பு கொண்டார். அந்த அழைப்பு எதையும் பிரதமர் மோடி ஏற்கவில்லை.தன்னுடனான பேச்சை அதிபர் டிரம்ப் ஊடக விளம்பரத்திற்கு பயன்படுத்துவார் என்ற முன்னெச்சரிக்கை இதற்கு முக்கிய காரணம்.

தென் கிழக்கு ஆசிய நாடான வியட்னாமுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் பேசினார். ஆனால், வியட்னாம் எந்த ஒப்பந்தமும் செய்வதற்கு முன்பாகவே, ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் முதிர்ச்சியின்றி சமூக வலைதளத்தில் அறிவித்தார்.இது போன்ற விஷயங்களை தவிர்க்கவே, அவரின் அழைப்பை பிரதமர் மோடி புறக்கணித்ததாக தெரிகிறது.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் மோதலை தான் நிறுத்தியதாக சமூக வலைதளத்தில் டிரம்ப் அறிவித்தார். பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா ஒரு நாள் கச்சா எண்ணெய் வாங்கும் என்றார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து வைத்தார். இவை, பிரதமர் மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளன.டிரம்பின் இந்த செயல்களால் பிரதமர் மோடி புதிய உத்தியை நோக்கி நகர்கிறார். சீனாவின் தியாஜினில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளது அந்த உத்திகளில் ஒன்று. சீன முதலீடும் தொழில்நுட்பமும் இந்திய தொழில்துறையின் வளர்ச்சிக்கு

உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us