2024ல் மீண்டும் மோடியே பிரதமர்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
2024ல் மீண்டும் மோடியே பிரதமர்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
UPDATED : ஜன 08, 2024 10:40 AM
ADDED : ஜன 08, 2024 05:37 AM

ஆர்.எஸ்.மங்கலம் : உலக அளவில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த ஆட்சியால் தற்போது 5வது இடத்தில் உள்ளது. 2024ல் மீண்டும் மோடி தான் பிரதமர் என மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூர் மற்றும் ஏ.ஆர்.மங்கலம் பகுதிகளில், மத்திய அரசின் நமது பாரதம், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு துறை மற்றும் கல்வி அமைச்சகம் இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங் பேசியதாவது:
முத்ரா கடன் திட்டத்தில் 5 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதில் 67 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புகையில்லா அடுப்பு வழங்கும் வகையில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுடன், நாட்டையும் ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் சென்றுள்ளார்.
2014ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது, உலக அளவில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பத்தாவது இடத்தில் இருந்தது. ஆட்சி பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் முயற்சியால், தற்போது ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளோம்.
2047ல் உலக அளவில் வளர்ச்சி அடைந்த பாரதமாக இந்தியா மாறி இருக்கும். அதற்கான முயற்சிகளில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். 2024ல் மீண்டும் மோடி தான் பிரதமர் அவரால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக ஆக்க முடியும் என்றார். முன்னதாக இணை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.