'மூடா' முறைகேடு வழக்கு: சித்தராமையாவுக்கு சம்மன் அனுப்பியது லோக் ஆயுக்தா
'மூடா' முறைகேடு வழக்கு: சித்தராமையாவுக்கு சம்மன் அனுப்பியது லோக் ஆயுக்தா
ADDED : நவ 04, 2024 07:29 PM

பெங்களூரு: 'மூடா ' வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் புதன் கிழமை அன்று ஆஜராக அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மைசூரு சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில், முதல்வர் மீது வழக்குப்பதிய கவர்னரும் அனுமதி வழங்கினார்.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், முதல்வர் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா தள்ளுபடி செய்தார்.
3 மாதம் 'கெடு'
இதற்கிடையில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திலும், ஸ்நேகமயி கிருஷ்ணா மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணையை, மூன்று மாதத்துக்குள் முடிக்கவும் கெடு விதித்தது.
இதையடுத்து, மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையா ஏ 1, பார்வதி ஏ 2, இவரது சகோதரர் மல்லிகார்ஜுன் சாமி ஏ 3, நிலம் விற்ற தேவராஜ் ஏ 4 ஆக சேர்க்கப்பட்டு வழக்குப் பதிவானது. மூடா வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருப்பதாக, அமலாக்கத் துறையிலும், ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் செய்தார். அதன்படி சித்தராமையா மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்தது.
விசாரணையை, மூன்று மாதத்திற்குள் முடிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதால், மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். புகார்தாரர் ஸ்நேகமயி கிருஷ்ணா, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி குமார் நாயக்( தற்போது காங்., எம்.பி., ஆக உள்ளார்) முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலய்யாபச்சே கவுடாவிடமும் விசாரிக்கப்பட்டது. முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, நிலம் விற்ற தேவராஜு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கும் லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வரும் புதன்கிழமை(நவ.,06) அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.