மாற்றுத்திறனாளி குழந்தை கொலை தாய், கள்ளக்காதலன் கைது
மாற்றுத்திறனாளி குழந்தை கொலை தாய், கள்ளக்காதலன் கைது
ADDED : பிப் 10, 2024 06:24 AM
தார்வாட்: திருமணம் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்ததால், மாற்றுத்திறனாளி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தார்வாட் டவுன் கமலாபூரை சேர்ந்தவர் ஜோதி, 30. இவரது மகள் சஹானா, 5. கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த ஜோதி, மகளுடன் தனியாக வசித்தார்.
இந்நிலையில் ஜோதிக்கும், ஹூப்பள்ளி நவநகரின் ராகுல், 27 என்பவருக்கும், கள்ளக்காதல் ஏற்பட்டது.
ஜோதி வீட்டிற்கே சென்று அவருடன், ராகுல் உல்லாசமாக இருந்து வந்து உள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, கள்ளக்காதலனிடம், ஜோதி கேட்டு உள்ளார். 'உனது குழந்தை மாற்றுத்திறனாளியாக உள்ளது. கடைசி வரை பார்க்க முடியாது. குழந்தையை கொலை செய்தால், திருமணம் செய்கிறேன்' என்று ராகுல் கூறி உள்ளார்.
கள்ளக்காதலனை திருமணம் செய்யும் நோக்கத்தில் இருந்த ஜோதிக்கு, குழந்தை இடைஞ்சலாக இருப்பது, ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு ஜோதியும், ராகுலும் சேர்ந்து சஹானாவின், கழுத்தை நெரித்துக் கொன்றனர்.
பின்னர் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து, குழந்தை இறந்ததாக, ஜோதி நாடகம் ஆடினார்.
ஆனாலும் சந்தேகம் அடைந்த, அக்கம்பக்கத்தினர், தார்வாட் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஜோதியை பிடித்து விசாரித்த போது, உண்மையை ஒப்புக்கொண்டார். அவரும், ராகுலும் கைது செய்யப்பட்டனர்.